Monday, April 9, 2012

ஈரான் அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்

அமெரிக்காவாஷிங்டன் : ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை நிரூபித்தால், அதன் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அணுஆயுதங்கள் தயாரிப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இதை ஏற்க மறுத்துவரும் ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, ஈரான் மீது போர்தொடுக்கப் போவதாகவும் இஸ்ரேல் எச்சரித்தது.

அதேநேரம், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரானும் மிரட்டல் விடுத்தது. இந்நிலையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ''அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், அதன் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம். மேலும் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்'' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலை துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனிடம் கூறி, அதை ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனியிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, கமேனியிடம் தயிப் கடந்த வாரம் தகவலை தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

By Anonymous with No comments

0 comments:

Share your opinion

Share me on facebook

  • Popular
  • Categories
  • Archives