Thursday, April 12, 2012

தமிழகம் முழுவதும் நிலநடுக்கம்

சென்னை : இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பத்தை அடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று  லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால்,  பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.  சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடுக்குமாடி  குடியிருப்புகள் குலுங்கின. பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மொபைல் போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

நிலநடுக்கம்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், ஊட்டி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் நேற்று பிற்பகலில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. பகலில் அனை வரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.  நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு வீதிக்கு வந்தனர்.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் வீதிக்கு வந்ததாலும், வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டதாலும், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்போன்களில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் தொடர்பு கொண்டதால் செல்போன் சேவை முற்றிலும் ஸ்தம்பித்தது.

மருத்துவமனைகளில் இருந்த நேயாளிகளும் வெளியே வந்தனர். இங்குபெட்டரில் வைக்கப்பட்ட குழந்தைகளைக் கூட பெற்றோர் பாதுகாப்புடன் வெளியே எடுத்து வந்தனர்.
அதேநேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. கடற்கரையோரங்களில் இருக்கும் பொதுமக்கள், அச்சத்துடன் தாங்கள் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் பீதி ஏற்பட்டது.

போலீசாரும் மைக்கில் எச்சரித்தனர். கடற்கரை ஓரங்களில் போலீசாரும், தமிழக அரசு அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதேபோல ஊட்டி, திருச்சி, மதுரையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் மழை பெய்யத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தடுக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கடற்கரை பகுதியில் இருந்து வெளியேறினர். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வளாகத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய இயக்குநர் கோபால் கூறியதாவது: சுமத்ரா தீவுக்கு வடக்கே கடலில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 1.40 மணியளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 8.7 ஆக அளவிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.  இது தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தை பதிவு செய்யும் அளவுக்கு என்று பார்த்தால் 3 முறை பதிவாகியுள்ளது. மதியம் 1.40 மணிக்கு 8.7 ரிக்டரும், 2.08 மணிக்கு ஏற்பட்டது 8.5 ரிக்டர் அளவும், மாலை 4.16 மணி அளவில் 8.1 ரிக்டர் அளவும் பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மூன்று முறை அதிர்வு காணப்பட்டது.

By Anonymous with No comments

0 comments:

Share your opinion

Share me on facebook

  • Popular
  • Categories
  • Archives