Friday, April 6, 2012

சென்னையில் வேகமாக பரவுது பன்றிக் காய்ச்சல்

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரே வாரத்தில் 2 சிறுமிகள் உள்பட 10 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சலுக்கு திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் பலியானார். கோவையில் 4 வயது குழந்தை, சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த பள்ளி சிறுமிகள் 2 பேர் உள்பட 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 2 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படித்த பள்ளிகளிலும் சுகாதார துறையினர் பரிசோதனை நடத்தினர். காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமி புளூ மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் கொடுத்து வருகின்றனர்.
சென்னையில் வேகமாக பரவுது பன்றிக் காய்ச்சல்தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பேரை இந்நோய் தாக்கியுள்ளது. அவர்களில் 10 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்காக அங்கு நவீன கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில்தான் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அம்பத்தூர், வேளச்சேரி, தரமணி, சைதாப்பேட்டை பகுதியில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று தி.நகர், தரமணி பகுதியில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. ஏற்கனவே கொருக்குப்பேட்டை பள்ளி சிறுமிகள் 2 பேர் உள்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் டாமி புளூ மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகிறது. 25 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசி மற்றும் டாமி புளூ மாத்திரைகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரிடமிருந்துதான் தமிழக மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யும் வகையிலும் ரயில் மற்றும் விமான நிலையங்களில் நோய் தடுப்பு மையம், மருத்துவ குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை, கோவை, திருப்பூரை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் இருமல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுவரை 26 பேர் பலி
இந்தியாவில் 2009-ம் ஆண்டுதான் முதன்முதலாக பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அப்போது பலர் இந்த நோய்க்கு பலியாயினர். அடுத்த 2 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைந்தது. கடந்த ஆண்டு ஒருவர் மட்டும் இந்நோய்க்கு பலியானார். இந்த ஆண்டு தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழகத்தில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று பன்றி காய்ச்சல் பாதிப்பால் 48 வயது பெண் ஒருவர் இறந்தார். இவருடன் சேர்த்து மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 350 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

By Anonymous with No comments

0 comments:

Share your opinion

Share me on facebook

  • Popular
  • Categories
  • Archives